Saturday, June 22, 2013

"தங்கம் வாங்காதீர்கள்”

நாட்டு நலனில் (இதில் மட்டும்)
அக்கறையுள்ள நிதியமைச்சர் சொல்கிறபடி

”மக்களே தயவு செய்து தங்கம் வாங்காதீர்கள்”

தங்கம் ஒரு தேசத்தின் கையிருப்பில் இருந்தால், அந்த தேசத்துக்கே மதிப்பு அதிகம். அதே தங்கம் தேச மக்களிடம் அதிகமாக இருந்தால் அதன் மதிப்பு மிகவும் ஆபத்தைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் , உலகிலேயே ஒரு பொருளை உற்பத்தியே செய்யாமல், அதே பொருளை உலகிலேயே அதிகமாகப் பயன்படுத்தும் ஒரே நாடு இந்தியாதான்.

அதாவது ஒரு கிராம் தங்கம்கூட உற்பத்தி செய்யாமல், ஏற்றுமதியும் செய்யாமல், அதே தங்கத்தை அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்வதால், நாம் செலுத்தவேண்டிய அந்நியச் செலாவணி அதிகமாகிறது. அதாவது, மென்பொருள் ஏற்றுமதி செய்து சம்பாதித்த காசை தங்கமாக இறக்குமதி செய்து வீணடிக்கிறோம். ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாகும்போது அந்த நாடு ஏழை நாடுகளின் பட்டியலுக்கு விரைந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

17000 டன் தங்கம் இந்தியர்கள் கையில் இருக்கிறது என்கிறார்கள். ஆண்டுக்கு 400 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. அதே சமயம், சீனா தனக்கான தங்க ஏற்றுமதியை அதிகப்படுத்திக்கொண்டே வருகிறது. இந்தியாவுக்கு தங்கத்தை ஏற்றுமதி செய்துவிட்டு அதன் வீழ்ச்சிக்காக சப்புக்கொட்டிக்கொண்டு காத்திருக்கிறது நமது எதிரி நாடான சீனா...

இன்றைய தேதியில், இந்தியப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல் நமது தங்க இறக்குமதி. இந்தியர்களிடம் அதிகத் தங்கம் இருக்கிறது என்பது பெருமைக்குரிய செய்தி இல்லை.அதனை சீர் செய்ய வேண்டும் என்று உண்மையிலேயே நினைத்தாலோ, கையிலிருக்கும் காசு , காசாகவே நிலைக்கவேண்டும் என்று நினைத்தாலோ, தயவு செய்து தங்கம் வாங்காதீர்கள்

நாம் தங்கத்துக்கு செலுத்தும் மதிப்பு அதன் உண்மையான மதிப்பு இல்லை. உண்மையில், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் வேலையாள் செலவுகள் மற்றும் லாபம் சேர்த்து, ஒரு கிராம் தங்கம் இன்றைய தேதிக்கு 589 ரூபாய் வரை விற்கமுடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது அதன் பயன்பாட்டு மதிப்பு அவ்வளவுதான். அப்படியானால், நாம் கொடுக்கும் 2500 சொச்சம்...? அதற்கான பண்ட மாற்று மதிப்பு! அது என்று வேண்டுமானாலும் தொபுக்கட்டீர் என்று பள்ளத்தில் விழுந்து மொக்கையாகி கிராம் 1000 ரூபாய்க்கு வர வாய்ப்பிருக்கிறது.
நன்றி சுரேகா